30 Oct 2010

எனது வீடு?

 எனக்கு திருமணம் நிச்சயம் ஆன போது, என் வீட்டை பிரிந்து செல்வதை நினைத்து தான் மிகவும் கவலை கொண்டேன்.

  விடுதியில் தங்கி படித்ததை தவிர்த்து வீட்டைவிட்டு பிரிந்ததே இல்லை. சிறு பிள்ளையாக இருந்த போது அத்தை வீட்டிற்கு ஆசையாக செல்வோம். அத்தை ஒரு ஜாலி பேர்வழி . என் அம்மா போல் இறுகிய முகம் இல்லாது எங்களுடன் நரி – கோழி, போலிஸ்-கள்ளன்  விளையாட்டுக்கு வருவார்.  நிறைய தின் பண்டங்கள் செய்து தருவார், மேலும் நல்ல கோழியாக பிடித்து சமைத்து தருவார். இருப்பினும் தூங்கும் நேரம் என் வீடு நினைவு வந்து அழுதுள்ளேன்.


எனக்கு 3 வயதாக இருந்த போது அப்பா எங்கள் வீட்டை வாங்கியதாக
கேள்விபட்டுள்ளேன்.  பின்பு ஒவ்வொரு அறையாக கட்டி பெரிது படுத்தினார்கள். முன் பக்கம் கடை, கடையோடு சேர்ந்துள்ள பின் அறையில் கூரையிலிருந்து வெளிச்சம் வருவதர்க்கென ஒரு கண்ணாடி பொருத்தபட்டிருக்கும் அந்த அறை நடுபகுதியில் இரு தூண்கள் உண்டு. அதில் சேட்டைக்கார தம்பியை கட்டி வைத்து, அம்மா அடித்தது நினைவுள்ளது. 

முன் பக்க அறையில் யேசுநாதரின் படம், ஜெபம் செய்யும் போது மெழுகுவத்தி பொருத்தி வைக்கும் நிலை,  பேயை துரத்தும் மிக்கேல் சம்மனசின் படம் என  பக்தி மயமாக இருக்கும் எங்கள் வீடு.  


 சுவரில் எங்கள் உறவினர்கள் மற்றும் எங்களுடைய புகைப்படங்கள் வரிசையாக  ஆணியறைந்து  மாட்டப்பட்டிருந்தது.  மேல் கூரை ஓடு என்பதால் கார்டு-போர்டால் தட்டி போன்று அடிக்கப்பட்டிருந்தது. விடுமுறை நாட்களில் எங்களுக்கு விளையாடும் கூடாரம் மட்டுமல்ல பெருச்சாளி, பூனை போன்றவை குட்டி போட்டு பெருக்கவும் அவ்விடத்தை பயன்படுத்தியது.
  
மழைவேளைகளில் சிறு பானைகளில் தண்ணிர் பிடிக்கும் அளவுக்கு, வீட்டின் அறைகள் ஒழுக ஆரம்பித்ததால் நான் 8 வகுப்பு படிக்கும் வேளையில் எங்கள் வீட்டை இரண்டு நிலையாக கட்ட அப்பா முடிவெடுத்தார்.

முன் பக்கம் கடை, பின் பகுதியில் வரவேற்பறை, அடுக்களை, சாப்பாட்டு அறை;  மேல் நிலையில் படுக்கை அறைகளும் குளியல் மற்றும் கழிவறையும் இருந்தது. 

 மொட்டை மாடியில் வித விதமான செடிகள், கிளிகள், முயல் என வளர்த்தோம். 

வீடு கட்டிமுடித்தவுடனே எனக்கு என ஒரு அறையை எடுத்து கொண்டேன்.  நெருங்கிய உறவினர்கள் வரும் போது எனது அறையை கொடுக்க வேண்டி வருவது தான் மிகப்பெரிய சோதனையாக இருந்தது.

அடுக்களையில் விறகு அடுப்பு இருந்தது.  விறகு அடுப்புக்கு மேல் நேத்திர பழக்குலை, ஆட்டு கால், உறியில் கருவாட்டு மீன் கட்டி போட்டிருப்பார்கள். எங்கள் பகுதி குளிர் பிரதேசம் என்பதால் அடுப்பில் தீயும்  பானையில் வெந்நீரும் எப்போழுதும்சேர்ந்தே இருக்கும்.  எழுந்த உடன் பூனையை போன்று அடுப்பு கரையில் கொஞ்சம் நேரம் சுருண்டு இருந்து தீ காய்ந்த பின்பு தான் மற்று வேலைக்கு நான் செல்வேன்.

அப்பாவுக்கு தேக்கு மர சாமான்கள் மேல் அலாதி பிரியம் இருந்ததால் எங்கள் வீட்டிலுள்ள சன்னல் – கதவுகள் கலை நயத்தோடு டிசைன் செய்ய பட்டிருக்கும். இப்பொருட்களை சுத்தமாக  பாதுகாப்பது என் பொறுப்பாக இருந்தது. சுவரில் அழுக்கில்லாது பார்த்து கொள்வோம். மாமி ஊரில் இருந்து வந்து தும்மி தும்மி சளியை சுவரில் தேய்த்து வைப்பதும் பின்பு அவர் சென்றது நாங்கள் கழுவதும் நினைவில் உள்ளது.

எனது முதல் மகன் பிறக்கும் வரை என் அறை எனக்கு என்றே இருந்தது. பின்பு குழந்தை நலன் எனக் கூறி வேறு ஒரு அறை தரபட்டது.   எ
தம்பியின் திருமணத்தின் போது வீட்டின் அமைப்பை மாற்றி அமைத்த வேளையில் எனது அறை முழுதுமாக பறிபோனது.

 எங்கள் மாட்டு பெண் வந்த சில நாட்களில் ஒரு பெரும் சுழல் காற்று எங்கள் வீட்டை தாக்கியது.  எனது பெற்றோர் கூட அந்த காற்றில் அடித்து ஒதுக்கப்பட்ட ஒரு குப்பை போன்று ஒரு மூலையில் முடக்க பட்டபோது, வாழ வந்தவர்களுக்கு வழிவிடும் சூழலில், வாழ்ந்து வந்த நானும் எனது தங்கையும் வீட்டிற்கு வெளியில் தள்ளபட்டோம்.  பின்பு வீடு என்பது எண்ணங்களிலும் கனவுகளில் மட்டும் ஒதுங்கியது.

இப்போழுதும் விடுமுறைகளுக்கு வீட்டிற்கு  செல்லும் போது, முன்பு விரும்பாத விருந்தாளிகளுக்கு கொடுக்கப்படும் அறை எங்களுக்கு தரபட்டதை  கண்டுகொண்டோம்.  

எங்கள் வீட்டில் ஒரு முகம் பார்க்கும் ஆளுயர கண்ணாடி  ஒன்று இருந்தது. அந்த கண்ணாடியை நோக்கி நாங்கள் அலங்காரம் செய்ததை விட அக்கண்ணாடியை நாங்கள்  அலங்காரம் செய்ததே மிகையாக இருந்திருக்கும்.  விபூதி இட்டு தேய்த்து ,பேப்பரால் துடைத்து மினு மினுப்பாக வைத்திருப்போம். அதன் அறைகளை பங்கு இடுவதில் எனக்கும் என் தங்கைக்கும் ஒரு மகாபாரதப் போரை நடக்கும்.  அந்த காண்ணாடி இப்போழுது எங்கள் வீட்டு மூலையில் அரவணப்பு அற்று  முடக்க பட்டபோது இன்னும் வேதனையாக இருந்தது.

மொட்டை மாடியில் துணி காயப்போடும் அசைக் கம்பியை இணைக்கும் ஒரு இருப்பிடம் இருந்தது. நான் படிப்பது, எனது பட்டணத்தை பார்த்து ரசிப்பது என என் உலகமே அதை சுற்றி இருந்தது. நாலு புறவும் தேயிலை தோட்டங்களால் சூழபட்ட எங்கள் பட்டணம், வீட்டிம் முன் பக்கம் கோட்டயம்–மதுரை ரோடு,  நாங்கள் செல்லும் ஆலயம், படித்த தொடக்க பள்ளி, மேல் நிலைபள்ளி, பேருந்து நிலையம்,  மழை வேளைகளில் பெருக்கெடுத்து ஓடும் எங்கள் பெரியார் நதியையும்  காணலாம்.
சமீபத்தில் சென்றபோது எங்கள் வீட்டு சொந்த வாரிசு அந்த கம்பியில் தொங்கி நின்று கொண்டு இது என்னுடையது அத்தை என கூறிய போது எனது அம்மாவும் சிரித்து கொண்டு எல்லாம் உன்னுடையது தான் என கூறிய போதும் மனதில் ஒரு முலையில் ஒரு முள் குத்துவதை போன்று உணர்ந்தேன். 
இப்போழுது என் வீட்டின் நினைவுகள் கொஞ்சம் கொஞ்சமாக மறைய ஆரம்பித்தது போல் தோன்றுகின்றது, இல்லை  மறக்க ஆரம்பித்து விட்டேன்.  சில வேளைகளில் பழைய புகைப்பட ஆல்பமே சில நினைவுகளை மனதில் கொண்டு வருகின்றது.

 13 வருடம் முன்பு பிரிய மனம் இல்லாது இருந்த , என் உயிர் மூச்சாக இருந்த என் வீடு இன்று எனக்கு அந்நியமாகப் படுகின்றது.  நான் எனது குழந்தை பருவத்தில் கண்ட இன்பமான என் வீடு இன்று எனக்கு விருந்து வீடாகி விட்டது. 

இப்போழுது எங்களது வீட்டு முற்றத்தில் இருந்து கொண்டு, என் அறை சன்னல் வழியாக எங்கள் தென்னை மரம், மாமரம், பிச்சியை கண்டு கனவு காண ஆரம்பித்துள்ளேன்!!.










12 comments:

  1. மிக அருமை. அப்படியே நாங்களும் நீங்கள் பிறந்த வீட்டிற்க்கு வந்த ஒரு உணர்வு
    .

    ReplyDelete
  2. நன்றி அண்ணா, உங்கள் வருகைக்கு.

    ReplyDelete
  3. very good go ahead

    ReplyDelete
  4. So thanks to visit and comment on my post.

    ReplyDelete
  5. GREAT ..!!! WRITE MORE ABOUT EVERYTHING..!!!

    ReplyDelete
  6. உங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  7. அருமை..

    பிறந்த வீடு மட்டுமல்ல சுவர்கள் கூட கதை பேசும்..

    வருடா வருடம் பிறந்த வீடு சென்று வருவது ரீசார்ஜ் செய்வதை போல.. எனக்கு.:)

    ReplyDelete
  8. என் அம்மா வீட்டிற்குச் செல்லும்போது, என்னவெல்லாம் தோன்றுமோ அதையெல்லாம் அப்படியே சொல்லியிருக்கீங்க.

    சில சமயம், உறவுகளைவிட, உணர்வில்லாத வீடும் மரங்களும் நம்மை ரொம்பவும் பாதித்துவிடுகின்றன.

    ReplyDelete
  9. சரியாக சொன்னீர்கள் தோழி!

    ReplyDelete
  10. அருமையாக எழுதியிருக்கிறீர்கள்... வாழ்த்துக்கள்.

    ReplyDelete