27 Aug 2010

அவனும் நானும்!

பேருந்து நிறுத்ததில் நின்று கொண்டிருந்த தனது கல்லூரி தோழியை, குடிபோதை  லாரி ஓட்டுனரால் கொல்லபட்ட சோக நிகழ்ச்சியை பகிர்ந்து கொண்டிருந்தார். எனக்கு மிகவும் கவலையளித்தது. ஆர்வ மிகுதியால் நட்பா, அல்லது காதலா என வினைவினேன். அது நட்பையும் கடந்தது.  ஆனால் காதல் அல்ல  என்றார்.!!!!  உண்மையில் இந்த விதமான உறவு நம் வாழ்க்கையிலும் கடந்து செல்வது உண்டு. நெருக்கமான நட்பு, தன்னலமற்ற அன்பு, காமமற்ற அன்பு என கூறி கொண்டே போகலாம். இவ்விதமான நட்பு பற்றி எண்ணி கொண்டிருக்கையில் எனது மனம் சர்ர்ர்ர்…. என 30 வருடத்தை பின்னோக்கி சென்றது.

 சபீர், என்ற என் தோழன் என்னுடன் டுயூஷனில் படித்தான். அவனும் நானும் போட்டி போட்டு படிப்போம். அவன் கணக்கு பாடத்தில் திணறி படித்தான்.  நான் பல முறை வீட்டு பாடம் முடிக்க உதவியுள்ளேன்.   அவனுக்கு என தின் பண்டங்கள் எடுத்து சென்றுள்ளேன்.  அவனுக்கு  கவலை என்றால் அன்று எனக்கு அந்த நாள் மகிழ்ச்சியாக இருக்காது.  அவன் ஒரு நாள் வரவில்லை என்றால் அவன் வீட்டுக்கு போய்  அவன் அம்மாவிடம் விசாரிக்காது மனம் அமைதி கொள்ளாது.  விடுமுறை நாட்களில் அவனை பார்க்க அவனுடைய வீட்டுக்கு சென்று வருவோம். அவனுடைய அப்பா கண் சிவப்பாக கோழிமுட்டை மாதிரி இருக்கும்.  சிரிக்கவோ, முறைக்கவோ மாட்டார். அவர் எங்கள் பகுதியிலுள்ள பெரும் தொழில் அதிபராக இருந்தார்.

சபீரின் அத்தை மகன் இந்த அடத்தில் உள்ளான்
பள்ளியில் யாராவது அடித்துவிட்டால் அவனுடைய தோழர்களிடம் சொன்னால் என் எதிராளிகளை கவனித்து விடுவார்கள். அம்மா என்னை 4 வயதில் டுயூஷன் அனுப்பி விட்டார்கள்.அப்போழுது எங்கள் ஊரில் பாலவாடி அல்லது ஆங்கில L.K.G,U.K.G வகுப்புக்கள் இருந்ததில்லை. கிளாடிஸ் டீச்சர் வீடு தான் எங்கள் பள்ளி! எங்கள் கிளாடிஸ் டீச்சர் அழகாக இருந்தார். ஆனால்  அவருடைய முகம்  அவர் வாழ்கை  போராட்டம் பற்றி சொல்லி கொண்டிருந்தது.


டீச்சரின் கணவர் காச நோயால் பாதிக்க பட்டிருந்தார். மகனும் முரடணாக இருந்தான்.  டீச்சரின் வீட்டில் விறகு அடுப்பு என்பதால் விறகு சரியில்லை என்றால் நாங்கள் புகை மூட்டத்திற்க்குள் தான் இருக்க வேண்டும்.  டீச்சரின் மகள் தனக்கு இருக்கும் காட்டத்தை கடுகு தாளிக்கும் போது வெளிப்படுத்துவார்.  ஒருவர் ஒருவராக நாங்கள் இரும ஆரம்பிப்போம். அது போகப் போக ஒரு பொழுது போக்காகவே மாறியது.  டீச்சர் மகள் எப்போழுது கடுகு தாளிப்பார் என காத்திருக்க தொடங்கினோம்.... தும்முவதற்க்காய்! டீச்சரின் அம்மா மிகவும் அழகான உயரமான  சற்று மனநலம் பாதிக்க பட்டிருந்தார்.   அவருடைய வேலையெல்லாம் கோழியையும்  குஞ்சுக்களையும் பராமரிப்பதே. அம்மா கோழிகளுடன் குஞ்சு கோழிகள் செல்வதே பார்த்து கொண்டு இருப்பது என் பொழுது போக்காக இருந்தது.

டீச்சருக்கு மூன்று தங்கைகள் இருந்தனர் ஒருவர் அப்போழுதுதான் திருமணம் ஆகியிருந்தார். இளைய தங்கை துணி தைத்து கொண்டே இருப்பார். யாரிடமும் அவ்வளவு பேசுவது   இல்லை. அவர் எப்போழுதாவது  கடைக்கு   செல்வார்.  அவர் சேலை கட்டி முடிக்க  ஒரு மணிநேரத்திற்கு மேல் ஆகும்.  குட்டி-கூறா பவுடர் இடுவது தான்  புல் ஸ்டாப்!,  மேக்கப் முடித்து விட்டார், இனி விடைபெற போகின்றார் என்ற குறியீடாக இருந்தது. மேலும் பவுடர் மணம் இதமான மணமுள்ள காற்றை தந்தது எங்களுக்கு.                                                                                                                      
                                                                                                                                                                                ரீச்சருக்கு 3 சகோதரர்கள் உண்டு .  ஒருவர் பள்ளி ஆசிரியர் பயிற்சி பெற்றுகொண்டிருந்தார்   நான்  சேட்டை செய்தேன் என்று   அவரிடம் நிறைய அடி வாங்கியுள்ளேன்.   இனி ஒரு சகோதரர்; வீட்டுக்குள் காலெடுத்து  வைத்தவுடனே அவர்கள் வீட்டில் மகாபாரத போர் ஆரம்பித்து விடும் . சட்டி பானை எல்லாம் எடுத்து எறிவது உடைப்பது போன்ற சத்தம் கேட்கலாம் . முதல் சகோதரர் ஒரு வாகன ஓட்டியாக இருந்துள்ளார். விபத்தில் சிக்கி நடு முதுகு தண்டவடம் ஒடிந்து படுக்கையில் இருந்தார்.  அவர் தான் அங்கு அரசர் மாதிரி.   தண்ணீர், சாப்பாடு என அவரை  நல் முறையில் கவனித்து கொள்வார்கள்.  அவரிடம் அவர்கள் வீட்டில் அனைவரும் நடுங்கி நிற்பார்கள். சிலவேளைகளில் அக்குடும்ப சண்டையின் தீர்ப்பு வழங்கி கொண்டிருப்பார், சில வேளைகளில் அவர் நண்பர்களுடன் அரசியல் கதைத்து கொண்டிருப்பார். அவருடைய சத்தம் மட்டுமே எங்களுக்கு பரிசயமாக இருந்தது, . அவருடைய உருவம் சத்தம் எல்லாம் எனக்கு ஒரு வித பயத்தை கொடுத்துள்ளது. கிட்ட போய் பார்ப்பது கிடையாது. 



எனது குழந்தை பருவத்தில் , அதிக நேரம் எனது வீட்டை விட அங்கு இருந்தது போல் தான் உணருகின்றேன்  .எனது வீட்டில் எனது சகோதரனும் சகோதரியும் சிறு பிள்ளைகளாய் இருந்ததால் எனக்கு கிடைக்க வேண்டிய நிறைய சலுகைகள் மறுதலிக்கப்பட்டது. பல வேளைகளில் விட்டு கொடுக்கும் சூழலுக்கும் தள்ள பட்டேன்.  அதனால் டுயூஷன் வீட்டில் நான் செல்ல பிள்ளையாகவே வளர்ந்தேன்.

அங்கு காலை தமிழும், மதியானத்திற்கு மேல் மலையாள மொழியும் கற்று கொண்டேன்.  பள்ளியில்  சேர்த்த போது அம்மா, தாய் வழி கல்வி என்ற நோக்குடன் தமிழ் வகுப்பில் சேர்த்து விட்டார்கள்.  எங்கள் ஆசிரியை ‘குழந்தை டீச்சர்'(பெயர்).  முகம் எப்போழுதும் போர்களத்தில் நிற்பது போன்றே இருக்கும். மேலும் தமிழ் ஆசிரியர்கள், வித விதமாக அடித்தார்கள். சிலர் கை மொழியில் அடிப்பின் , சிலரோ தொடையில் கிள்ளுவர், சிலர் கட்டிபிடித்து கவுகூட்டு பக்கம் தேடி நுள்ளி வைப்பர். இலங்கயில் தமிழ் மக்களுக்கு ஆர்மிகாரர்கள் தெரிந்தது போலவே எனக்கு தமிழ் ஆசிரியர்கள் தோன்றினர். மேலும் எனது தோழன் சபீர், பமீஜா,போன்றவர்கள் மலையாளம் வகுப்பில்  இருந்ததால், அம்மாவிடம் சண்டை பிடித்து மலையாளம் வகுப்பில் சேர்ந்து கொண்டேன். அஸீஸ் சார், அயிஷா பீபி டீச்சர் எனக்கு ரொம்ப பிடித்திருந்தனர்.  பேபி டீச்சருக்கு நான் மலையாளம் பள்ளிக்கு சென்றதில்  துளியும் விருப்பம் இல்லை, கோபவும் கொண்டார்.

நானும் அவனுடைய வகுப்பில் கிட்ட கிட்ட உட்கார்ந்து கொள்வோம்.  எங்கள் நட்பு நன்றாக சென்றது. அவனுடைய கூட்டாளிகள் அப்பாஸ், ராஜன், ஜெயன் போன்றோர் எனக்கும் கூட்டாளிகள் ஆகினர். அதில் ராஜன் 2 வகுப்பு படிக்கும் போது வேறு பள்ளிக்கு சென்று விட்டான் இருந்தாலும் கடிதம் எழுதி கொள்வோம்.  ஒரு முறை அவனுடைய அப்பாவுடன்  எங்கள் வீட்டிற்கு என்னை பார்ப்பதற்கு  வந்திருந்ருந்தான் .  பின்பு அவனை கண்டதே இல்லை.

 பிந்து, மோன்சி, ஜெயா, ரமலத்து, ரஷீதா, லதா, போன்றவர்கள் வகுப்பு  தோழிகள் ஆகினர். சவுதாம்மா என்ற ஒருத்தி எங்கள் வகுப்பில் இருந்தாள் அவள் என்னை அடிப்பாள். அவளுடைய முகம் அம்மை வந்த தழும்புக்களால் பார்க்க கொஞ்சம் பயமாக இருந்தது. இவளை சரிகட்ட ஜெயாவின் உதவி தேவை பட்டது. ஒரு முறை சவுதாவை ஜெயா விரட்டி விரட்டி எனக்காக அடித்து விட்டாள்.  பின்பு என்னை பார்த்தால் பயந்து ஒதுங்கி சென்று கொண்டிருந்தாள்  அதன் பின் நாங்கள் உற்ற  தோழிகள் ஆகினோம். (ஜெயா தனது 21 வது வயதில் தன் மூன்று சகோதரிகளுடன்  குளத்தில் விழுந்து  தற்கொலை செய்து கொண்டாள்.)

வெள்ளி கிழமைகளில் எங்களுக்கு மதியம் மாணவர் கூட்டமைப்பு சம்மேளனம் நடக்கும்.  மாணவர்களே சேர்ந்து பாட்டு ,நடனம், பேச்சு என தொகுத்து வழங்குவோம்.எ ல்லோரிடம் காசு சேர்த்து; மிட்டாய், சந்தனம் வாங்கி பகிர்ந்து அளித்து வெள்ளி கிழமை என்பது எங்களுக்கு பெரும் விழா போன்றே இருக்கும்.  எங்கள் பகுதியில் கிடைக்கும் உண்ணி பூக்கள் கொண்டு மேசையை அலங்கரிப்போம்.

4  வது வகுப்பு வந்த போது ஆண்,பெண் என்ற பெரும் சண்டையில் உடைந்தது சபீறுடன் ஆன எனது தோழமையுமே.  அவனுடன் பேசினால் எங்கள் பெண்கள் சங்கத்தை அவமதித்தது போன்று ஆகி விடும் என்பதால் அவனை பார்த்தால் பேசுவதே இல்லை, 5-ம் வகுப்புக்கு பின்பு இரு பாலருக்கும் தனி தனி வகுப்பறை என்பதால் அவனை பார்க்கும் சூழலே அற்று போனது.  7 ம் வகுப்பு வந்த போது பள்ளி மாணவர் தலைவர் பதவிக்கு  எனக்கு ஓட்டு போட அவனிடம் கேட்டிருந்தேன்.  அவன் எனக்கு தான் ஓட்டு போட்டிருப்பான்/

பின்பு 10 வகுப்பு வந்த போது ஒரே வகுப்பில் டியூஷனில் கற்றோம்.  சிறு சிரிப்பை தவிற பேசி கொள்ளும் வாய்ப்பே உருவாக்கி கொள்ளவே இல்லை.   எங்கள் தோழமை அவன் மனதிலும் மாறாது இருந்துள்ளது என பின்பு அறிந்தேன் இன்னொரு பள்ளி நண்பன் வழியாக.  நான் மேற் கல்வி என வேறு பிரதேசம் சென்ற போது அவன் வியாபாரத்தில் வந்து விட்டான் அவனது தந்தையை போன்று.

திருமணத்திற்கு பின்பு எனது கணவருடன் அவன் கடைக்கு சென்ற போது கதைத்திருந்தேன்.  அவனுக்கு 3 குழந்தைகள் உள்ளதாக கூறினான். அவனுடைய குழந்தைகள், மனைவியை காண என்னை அழைப்பான் என நினைத்தேன் ஆனால் அவனுடைய மன நிலை எவ்வாறாக இருந்தது என தெரியவில்லை.  ஆகினும் நட்பு, அதையும் தாண்டி புனிதமான அன்பு அழியாதது என்று மட்டும் என் மனம் சொல்லியது!




11 comments:

  1. மிக அருமையான பதிவு, அழகாக காட்சிகளை கண் முன்னே கொண்டு வந்து உள்ளீர்கள்.
    பள்ளி காலங்களில் நமக்கு ஏற்படும் அந்த நட்பு எந்த வித பிரதிபலனும் எதிர்பாராமல் இயல்பாய் ஏற்படும் நட்பு/அன்பு.

    நாம் ஏழை, பணக்காரர்., ஜாதி ,மதம் என்ற பாகுபாடு எல்லாம் பார்க்காமல் நட்பு கொள்ளும் காலம் அது

    ReplyDelete
  2. அன்பு தோழிக்கு ..... வணக்கம் தங்களுடைய வலை பூ வில் என்னுடைய தோழி பற்றியும் தங்களுடைய தோழன் பற்றியும் படித்து அறிந்தேன் ...உண்மையில் அவர்களின் உறவுகள் மட்டுமல்ல அவர்களின் நினைவுகள் கூட நமக்கு மகிழ்ச்சி தருகின்றன ....மிக்க நன்றி .

    ReplyDelete
  3. பால்ய நட்புகளின் நினைவலைகள் என்றும் மறைவதில்லை.
    அருமையான பதிவு

    ReplyDelete
  4. நல்லதொரு பதிவு சகோதரி.. பால்யத்தின் ஞாபகங்கள் என்றுமே மறந்துவிட முடியாதவை. அவை மட்டும் எப்பொழுதும் நம் கூடவே வருகின்றன.

    எனது பால்ய கால ஞாபகம்
    http://mrishanshareef.blogspot.com/2008/04/blog-post.html

    ReplyDelete
  5. //எனது குழந்தைகளுக்கு மனித உறவுகளின் தேவையை பற்றி சொல்லி கொடுப்பது உண்டு.

    Good one.

    //தீவிரமான ,தன்னலமற்ற உறவுகள் காணுவது பேணுவது அரிதாக உள்ளது.

    Yes.

    ReplyDelete
  6. அருமையான பதிவு ஜோசபின்,
    இப்படிக் காதலும் இன்றி, காமமும் இன்றி மனதுள் வாழும் அன்பு கலந்த உறவுகளை எப்படிக் குறிப்பிடலாம் என நானும் யோசித்திருக்கிறேன். உங்கள் பள்ளி வாழ்க்கையின் ஒரு பகுதியை அப்படியே மனக்கண்ணில் காண முடிந்தது.

    ReplyDelete
  7. என் பதிவுக்கு வந்து மறுயூட்டம் இட்டு உற்சாகப் படுத்திய என் நண்பர்களுக்கு என் அன்பு கலந்த நன்றிகள்!!

    ReplyDelete
  8. அருமையான பதிவு.
    மிகவும் நேர்த்தியாக எழுதியிருக்கிறீர்கள்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. How can you able to memorize all this incident in the age of six.......... very nice

    ReplyDelete
  10. நண்பா உண்மையில் பால்ய நினைவுகள் அவ்வளவு எளிதாக அழிவதில்லை என்றே நினைக்கின்றேன். அதனால் கூட நினைவில் நின்றிருக்கலாம்.

    ReplyDelete
  11. Sathalakshmi BaskarJuly 28, 2018 8:55 pm


    (ஜெயா தனது 21 வது வயதில் தன் மூன்று சகோதரிகளுடன் சேர்ந்து குளத்தில் தாவி தற்கொலை செய்து கொண்டாள்)தவறிவிழுந்ததா?...

    மிகவும் நல்ல பதிவு .வாழ்த்துக்கள்.
    தற்கொலை. தன் சகோதரிக்கு திருமணம் நடக்கவில்லை என்ற வேதனையில் சகோதரிகள் மூவரும் தற்கொலை செய்து கொண்டனர்.

    ReplyDelete