15 Aug 2010

நானும் பிச்சைகாரர்களும்

என்னுடைய ஊரில் ‘மினி மார்கெட்’ என அழைக்க படும் ஓர் பகுதி உள்ளது. முக்கிய சாலையோரம், பேருந்து நிலையத்தின் மிக அருகாமையில்,  மற்றும் எங்கள் ஊர் காவல் நிலையத்திற்க்கு மிக அருகில் அமைந்த ஒரு  பகுதியாகும்.  தமிழகத்திலுள்ள குடிசைப்பகுதி போன்றுள்ள பகுதி. சிறுவயதில் என்னுடைய கவனத்தை ஈர்த்த ஓர் பகுதி.  தினமும் நாங்கள் பள்ளி செல்லும் போது இந்த பகுதியை கடந்து செல்ல வேண்டியிருந்தது.  அங்குள்ள மக்கள் எல்லோரும் பிச்சைகாரர்களாகவும் இருப்பது இல்லை.  சிலர் வீட்டு வேலைக்கு செல்பவர்கள்,வீட்டு கட்டுமான பணிக்கு செல்பவர்கள், கஞ்சா போன்ற பொருட்களை (சிறு தோதில்)கடத்துபவர்கள், வட்டிக்கு கொடுப்பவர்கள், பாலியல் தொழில் புரிபவர்கள் என பல தர மக்கள் இருந்தனர். இவர்கள் உரிய உடல் நலம் உள்ளோர் வேலைக்கு செல்லின், வழியற்றவர்கள் பிச்சை எடுக்க வருவர்.அவ்வாறு வரும் வேளைகளில்  எங்களுடைய  கடைகளுக்கு வெள்ளி கிழமைகளில் மட்டும்.குறைந்தது 25 காசுக்கு குறையாது கொடுக்க வேண்டும். இதிலும் குறைவாக 10-20 காசு கொடுத்தால் நம்மளிடமே தூக்கி எறிந்து விடுவார்கள்.இதற்க்கென ஆடையலங்காரம், ஒரு விதமான பாத்திரம், பை வைத்திருப்பார்கள். இந்த பிச்சகாரர்களில் ஒருவர் கூட மலையாளியாக பார்த்தது இல்லை .காரணம் பிச்சைக்கு என தொழிலை கையிலெடுக்கும் முன் தமிழ் பிச்சைக்காரன் அல்லது தமிழ் பிச்சைகாரியை மணம் முடித்து அக்மார்க்கு தமிழராக மாறிவிடுவர். இதனால் வகுப்புகளில் பாடம் நடத்தும் ஆசிரியர்களாகட்டும், பேராசிரியர்கள் ஆகட்டும் மாணவர்களுக்கு பிச்சைகாரர்களை பற்றி கூறும் போது பாண்டிகள் கண்டிடுண்டோ?அவரா தெண்டிகள் என விளக்கவுரை நடத்துவர்.(மலையாளம் வழி கல்வி கற்றதால் நேர் அனுபவம்)




இவர்களிடம் ரசிக்கும் படியான விஷயம் வாழ்க்கையை அணுவணுவாக ரசிச்சு வாழ்வதாக தோன்றும்.  நம் போன்ற மக்களுக்கு அவை அருவருப்பாகவும்(.அங்காடி தெருபடத்தில் காலை மிதித்து விளையாடுவதை நினைவுகூறவும்). பகல் முழுக்க அழுக்கு பிடித்த ஆடை, பரட்டை தலையுடன் அலையும் மக்கள் மாலை 4 மணிக்கு ஒரு கிலோ அரிசி வாங்கி சென்று கஞ்சியாக குடிப்பார்கள்.(கஞ்சி குடிப்பதை எப்படி அறிந்தேன் என கேட்க்கின்றீர்களோ.எங்க ஊரில் 6 மாதம் மழையாகதான் இருக்கும்,வாங்கும் பொருட்களை வைத்துள்ள அனுமானமே) 6 -7 மணிக்கு குளித்து,சுத்தமான ஆடை அலங்காரத்துடன் சினிமா தியேட்டருக்கு செல்வர். ஒரு குடும்பம் என அல்லாது 10 -15 குடும்பம் சேர்ந்து குட்டி குழந்தைகளுடன் குதூகுலமாக ஓடி செல்வார்கள் டிக்கெட் வாங்க. படம் முடிந்து செல்லும் போது ஆண்கள் குடித்து தள்ளாடி சிலர் கெட்டவார்த்தைகளுடன் சண்டையிட்டு செல்வர்,சில பெண்களும் தான்!


வாரத்துக்கு எல்லா நாட்களும் தியேட்டருக்கு வருவார்கள்.இந்த பகுதியில் ஒரு தொழுநோயால் ஒரு கை இல்லாதவனுக்கு இரண்டு மனைவி இருந்தனர். அவன் பிச்சை எடுக்கும் பணத்தை வட்டிக்கு கொடுப்பதாக கேள்விபட்டுள்ளேன்.அவனுடைய மனைவிகளை சாட்டையை வைத்து அடிப்பானாம். இரண்டாவது மனைவி அவனுடைய மகளுக்கு ஒத்த வயதில் இருந்தாள்.


அதே பகுதியில் தேனம்மா என்ற பிச்சைகாரி எனது பாட்டியை தேடி வந்து பேசி கொண்டிருப்பார். எனது அம்மா பாட்டியை திட்டுவார்கள் ஏன் பிச்சைகாரியிடம் மணிக்கணக்காக பேசி கொண்டிருக்கின்றீர்கள் என. அம்மாவுக்கு தேன்ம்மாவை பிடிக்காது ஏன் என்றால் எப்போழுதும் தன் பிச்சைக்கார கணவருக்கு பேன் பார்த்து கொண்டு இருப்பதால் தான்! ஆனால் பாட்டி தேனம்மாளை பற்றி கூறும் போது அவளுடைய விதி அவளை தெருவுக்கு கொண்டு வந்து விட்டது என கவலைபடுவார். எனது பாட்டி தேயிலை தோட்டதில் பணியாளராக வேலைபார்த்து கொண்டுருந்தபோது தேனம்மா அந்த எஸ்டேடில் புதிதாக மண்ம் முடித்து வந்துள்ளார். அவள் அணிந்த நகைகளை பெண்கள் அதிசயமாக பார்க்கும் அளவுக்கு இருந்துள்ளது. மூக்குத்தி, ஒட்டியாணம்,  வளையல்கள், என பார்க்கும் பெண்களுக்கு ஆச்சரியமாகவே இருந்துள்ளார். பார்ப்போரை பரிவுடன் பேசுவது, நலம் விசாரிப்பது என எல்லாருடனும் அன்பாக பழகி இருந்துள்ளார். இரண்டு குழந்தைகள் என ஆகிவிட வீட்டு வேலைக்கு உதவியாய் வந்த தன் தங்கை, பின்பு கணவருக்கு அன்பு மனைவி ஆகிவிட்டாள் என அறிந்ததும் புத்தி தடுமாறி வீட்டை விட்டு வெளியேறிய தேனம்மாவுக்கு அடைக்கலம் கொடுத்தது மினி மார்க்கெட் மட்டுமல்ல மினி மார்க்கெட்டில் குடியிருந்த பிச்சைகாரரும் தான். பிச்சைகார கணவர் இறந்த  பின்பு ஒரு மலையாளி வீட்டில் பணியாளராக இருக்கும் போது, ஆற்றில் துணிதுவைக்க சென்ற இடத்தில் ஆற்றிலே இறந்து போனார்.அவருடைய குழந்தைகளும் பிச்சைகாரர்களாய் மாறியது.


சரணாலயத்தால் மீட்க்கபட்ட சிறார்.
எனக்கும் ஒரு பிச்சைக்கார சிறுவன் நண்பன் ஆகினான். நான் செல்லும் ஆலய வாசலில் பிச்சை எடுத்து கொண்டிருப்பான். அவனுடைய அக்கா அவனுக்கு பிச்சை எடுக்க பயிற்ச்சி கொடுப்பாள். சத்தமா கேளுடா என கிள்ளிவிடுவாள்.அவன், மேடம் பிச்சை தாங்க என கருணைகுரலில் பிச்சை கேட்பான்.அவனிடம் சில தருணங்களில் பேசுவது உண்டு. ஒரு முறை அவனுடைய  அக்கா மாரியம்மா எங்கே,  என விசாரித்த போது வயசுக்கு வந்ததால் பிச்சை எடுக்க வருவதில்லை என கூறினான். அவன் இப்போழுது தன் தங்கைக்கு, தம்பிகளுக்கு பயிற்ச்சி கொடுத்து கொண்டிருந்தான்.அவனுடைய தாய் மடியில் இப்போழுதும் புதிதாக பிறந்த குழந்தை விளையாடி கொண்டிருந்தது. ஒரு முறை திருநெல்வேலியில் உள்ள குழந்தை சரணாயலத்திற்க்கு சென்ற போது அவனை அங்கு பார்த்தேன். மேடம் என்னை நினைவு உள்ளதா நான் படிச்சு பெளேன் ஓட்ட போறேன் என கூறினான். அவனிடம் உரையாடிய போது கேரளாவில் பிச்சை எடுக்கும் போது எவ்வகையான மொழி பயண்படுத்த வேண்டும்,எப்படி பாட்டு பாடி பிச்சை எடுக்க வேண்டும்  என சில டிப்சு தந்து கொண்டிருந்தான். அங்கு இவனை போன்ற குழந்தைகளை கவனிக்கும் ஊழியர், “நல்லா பேசுவான் வேலை செய்யதான் உடம்பு வளையாது” என சொல்லிகொண்டிருந்தார். பின்பு அவன் தங்கி படிக்கும் பள்ளிக்கு சென்ற போது ரொம்பவே மன அளவில் குழப்பத்தில் இருந்தான்.அப்போழுது அவனுடைய மனநிலை படிப்பதிலும் தன் சகோதரன், பெற்றோரிடம் சேரும்  நோக்கில் இருந்தான். பிச்சைகார குழந்தைகளுக்கு ஒரு நிலையான வாழ்க்கை மிகவும் கஷ்டமானது என அறியபட்டேன்.குறுகிய நாட்களில் பள்ளியை விட்டு தப்பி சென்றதாக கேள்விபட்டேன். இந்த மாதிரியான குழந்தைகள் நமது இரக்கத்தை விட நாம் காட்டும் வஞ்சனை அற்ற அன்பை, அவர்கள் உணர்வுகளை மதிக்கும் பண்பை  பெரிதும் விரும்புகின்றனர்.அவர்கள் விரும்பும் அங்கிகாரம் நாம் கொடுக்க துணிவது கிடையாது.


இதை போன்ற 10 பிச்சைகார குழந்தைகளுக்கு பாதுகாவலர்களை(local guardian) உருவாக்க வேண்டும் என நோக்கில் சில வசதிபடைத்தவர்கள், பேராசிரியர்கள்,பேராசியைகளை நெருங்கினேன். இதிலும் சிறப்பாக நான் சார்ந்த கிருஸ்தவர்களையும் அணுகினேன். சிலர் அநியாயத்திற்க்கு பரிதாப பட்டார்கள் . ஆனால் யாரும் ஆக்க பூர்வமாக செயல் ஆற்ற முன் வரவில்லை. சிலருடைய நாவிலுள்ள இரக்கம் மனதில் இல்லை என தெரிந்த போது நொறுங்கி போனது என் மனம்.

2 comments:

  1. நெகிழ்வான பதிவு.

    ஆம் என் போன்ற மனிதர்களுக்கு நாவில், எழுத்தில் உள்ள இரக்கம் மனதில் இல்லை தான்.

    ReplyDelete
  2. இன்று தான் உங்கள் பதிவுலகம் கண்டேன்.மிகவும் நன்றாக உள்ளது.
    ”நம்மை பாதிக்கும் விஷயங்கள் குறித்து நாம் அமைதி காக்கத் தொடங்கும் தினத்தில் நம் வாழ்க்கை முடிவு பெற ஆரம்பிக்கிறது” என்பதுதெளிவானதோர் கூற்று.

    பிச்சைக்காரக் குழந்தைகளின் வாழ்கை பரிதாபமானது.

    முடிந்தால் visaran.blogspot.com வாருங்கள்

    ReplyDelete